மருத்துவர்களை பற்றி நான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என்றும் மக்களை திசைதிருப்ப சில எம்.எல்.ஏக்கள் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்களை மனம் புண்படும் வகையில் அவதூறாக பேசுவதாக கூறி மருத்துவர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ் அப் பதிவு மூலம் விளக்கமளித்துள்ள கிரண்பேடி, அந்த பதிவில், “பேரவையில் எம்எல்ஏ ஒருவர் பேசும்போது நான் டாக்டர்களுக்கு எதிராக பேசியதாக கூறியுள்ளார். இது 100% உண்மைக்குப் புறம்பானதாகும்.
இதேபோல் அரசு ஊழியர்களின் மாத சம்பளம் உட்பட பல விஷயங்களை நான் பேசுவதாக பொய்யாக கூறுகின்றனர். இப்போது அதனைப் பற்றி பேசவேண்டிய நேரம் இல்லை.
இது பொது மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கும் நல்ல வாழ்விற்கும் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பஞ்சாபில் நான் வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக என் மீது வழக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அது 100% உண்மைக்கு புறம்பானதாகும்.
நான் வீட்டு உரிமையாளர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி வருகிறேன்.
சில எம்எல்ஏக்கள் மக்களை திசை திருப்பும் வகையில் வேண்டுமென்றே என் மீது சில பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
அவர்கள் எதற்காக அவ்வாறு கூறுகிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
அவர்கள் புதுவையில் உள்ள மனநல மருத்துவமனைகளை அணுகலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.