மதுரை மாவட்டம் மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்திருப்பவர் மோகன்.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது மகள் நேத்ராவின் கல்வி மற்றும் திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.5 லட்சத்தில் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவைகளை வாங்கி, 1,500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார்.
மோகன் மற்றும் நேத்ராவுக்கு தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு) அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ;
மதுரை மாவட்டம், மேலமடை, வண்டியூர் மெயின் ரோடு,முடிதிருத்தகம் நடத்தி வரும் திரு. மோகன் என்பவர், தனது மகள் செல்வி நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க , ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு , தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னலம் கருதாமல் , அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், செல்வி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.
செல்வி நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும் , இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என இத்தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.