அரசு ஊழியர் செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம் – கமல்ஹாசன்

அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம் என்று மநீம தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் களக்காட்டூர் பகுதியிலுள்ள அரசு வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தினால் வேறொருவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு செல்லும் பொழுது செப்டிக் டேங்கில் விழுந்து இளநிலை உதவியாளர் சரண்யா உயிரிழந்தார்.

26 வயதான மாற்றுத்திறனாளி பெண் சரண்யா உயிரிழந்ததை அடுத்து அவருடைய குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்; அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அப்பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தினால் வேறொரு வீட்டிற்கு கழிவறைக்கு சென்ற அரசு ஊழியர் மாற்றுத்திறனாளி பெண் சரண்யா உயிரிழந்ததை தொடர்ந்து உரிய நீதி வழங்கக்கோரி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை.

அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம்.

பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா?

நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே