ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இவர், திமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வகித்து வந்தார்.
அண்மையில் டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் கு.க. செல்வம் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அதனையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் அவசர ஆலோனையில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் தற்பொழுது பதில் கடிதம் ஒன்றை அளித்திருந்தார். அதில், இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதால் என்னை சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள்.
பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடி கலைஞரை நேரில் சந்தித்து அனைவருக்கும் தெரியும். கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல.
நான் பொய்யாக, அவதூறாக என்ன சொன்னேன் என நோட்டீஸ் கடிதத்தில் இல்லை என விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செல்வம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.