இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39ஆவது தலைவராக சவுரவ் கங்குலி இன்று பதவியேற்க இருக்கிறார்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்வாகியுள்ளார்.
மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் முறையாக பதவியேற்க இருக்கிறார்.
இதன்மூலம் 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது.
பிசிசிஐயின் செயலாளராக உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும், துணைத்தலைவராக உத்தரகண்டில் சேர்ந்த மஹிம் வர்மாவும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.
பிசிசிஐ-இன் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமல் பொருளாளராகவும், இணைச் செயலாளராக கேரளாவைச் சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ்-ம் பொறுப்பேற்க இருக்கின்றனர்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை சீர் அமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததால் பிசிசிஐயின் தலைவர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டன.
பிசிசிஐயை நிர்வகிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டது. புதிதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் பதவி ஏற்றவுடன் இந்த குழு பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.