முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.

பீஹாரில் இருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் குணமடைந்த அவர், டில்லி சென்றிருந்தார்.

தொடர்ந்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று(செப்., 13) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்த அவர் லாலு பிரசாத்திற்கு மிக நெருக்கமாக இருந்தார். சில நாட்களுக்கு முன்னர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இதனால், பீஹார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை நிறைவேற்றுவதில், மத்திய அமைச்சராக இருந்த ரகுவன்ஷ் சிங் பிரசாத் முக்கிய பங்காற்றினார்.

அவரது உடல், சொந்த ஊரான பீஹாரின் வைசாலி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

ரகுவன்ஷ் பிரசாத் மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:ரகுவன்ஷ் பிரசாத் சிங் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: ரகுவன்ஷ் பிரசாத் சிங் நம்முடன் இல்லை. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே