நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம், கொங்கன் & கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிராவில் பரவலாக கனமான முதல் மிக கன மழை வரை பெய்தது.
பல இடங்களில் சாலைகள், பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
மேற்கு மத்திய பிரதேசம் கிழக்கு ராஜஸ்தான், குஜராத் மற்றும் துணை இமயமலை மேற்கு வங்கம், சிக்கிம்; மத்திய மகாராஷ்டிரா, அசாம் மற்றும் கொங்கன் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்தநிலையில் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகம் உட்பட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
இந்தநிலையில் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கவுள்ளதாகவும் இதனால் ஆந்திரா, மேற்குவங்கம், ஒடிசா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.