ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நவம்பர் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21ந்தேதி கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு, உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் கடந்த 21ந்தேதி ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப. சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த மாதம் 16-ஆம் தேதி திஹார் சிறையில் கைது செய்தது. 

தொடர்ந்து அவரது காவலை நீட்டிக்க கோரி கடந்த மாதம் 24-ஆம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை முறையீடு செய்திருந்தது.

அதன்படி அவரது காவலை அக்டோபர் 30-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி காவல்முடிவடைந்த நிலையில், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் ப.சிதம்பரம் 30-ஆம் தேதியன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ப.சிதம்பரத்தின் காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அமலாக்க துறையின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னர் ப.சிதம்பரத்திற்கு நவம்பர் 13ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  

அதேசமயம் தில்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திற்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்க அனுமதியும்  வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி ப.சிதம்பரத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு தனி சிறை வசதி கொடுக்கலாம். 3 வேளை வீட்டு உணவு வழங்கவும், போதிய மருத்துவ வசதி மற்றும் மேற்கத்திய கழிவறை வசதி வழங்கவும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தின் காவலை, இம்மாதம் 27-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே