கடலூரில் 500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாக ஆடியோ மெசேஜ் அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த ராஜாராமன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாராமனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.
இதுவரை 50,000 இ-பாஸ்கள் வாங்கியுள்ளதாக ராஜாராம் ஆடியோவில் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வேலூரில் ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வழங்கப்படும் என விளம்பரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ம் கட்ட தளர்வுகள் அமலில் உள்ளன. இருப்பினும், தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ, மண்டலத்திற்கோ அல்லது பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமானால் இ-பாஸ் அவசியம் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பணம் வாங்கிக்கொண்டு இ-பாஸ் பெற்று தருவது போன்ற மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.