அறிஞர் அண்ணா சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

வீழ்ந்து கிடந்த தமிழினத்தைத் தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்தவர் அண்ணா என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 15), மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் அவர்களின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, வள்ளுவர் கோட்ட முகப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அண்ணா அறிவாலயத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தும், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது திருவுருப்படங்கள் மற்றும் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் முகநூல் வழியாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

“வீழ்ந்து கிடந்த தமிழினத்தைத் தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த அண்ணா பிறந்தநாள் இன்று!

அவர் ஊட்டிய இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி ஆகிய மூன்று கொள்கைத் தீபங்களை எந்நாளும் காப்போம்!

அவர் வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்!

அண்ணா வாழ்கிறார்! வாழ்விப்பார்!”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே