திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வேட்டையாடுவதை தடுக்க முயன்ற வனக்காவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வன விலங்கு வேட்டையைத் தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் துறையூர் டாப்செங்காட்டுப்பட்டி அருகே கானப்பாடி வனப்பகுதியில் விலங்குகளை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறையினர் 6 பேர் கொண்ட குழு அப்பகுதியில் தடுப்பு & கண்காணிப்பு பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற நபரை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது வேட்டையாட வந்த நபர், வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு, துப்பாக்கியையும் அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். 

துப்பாக்கி சூட்டில் வனக் காவலர் வீரபாண்டியன் கழுத்தை உரசியபடி குண்டு சென்றுள்ளது.

இதில் காயமடைந்த அவர் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வனத்துறையினரை சுட்டு விட்டு தப்பியோடிய பூதக்கல் பகுதியைச் சேர்ந்த முத்தகிருஷ்ணன் என்ற பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே