வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஒடிசா-மேற்குவங்கம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளில் இன்றும் நாளையும் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் அப்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகம், கர்நாடகா, கேரளா, ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.