குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்தும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனிடையே மம்தா பானர்ஜியின் பேரணி அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தாங்கர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற பேரணி வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், போராட்ட முடிவை திரும்ப பெறுவதுடன், அதற்குப் பதிலாக மாநிலத்தில் நிலவும் இறுக்கமான தன்மையை சரி செய்யும் முயற்சியில் மம்தா அரசு இறங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.