குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை: பிரதமர் மோடி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகள் பெரும் வேதனையை தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் தால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எனவே இதுபற்றி இந்தியர்கள் எவரும் கவலைப்பட தேவையில்லை என்றும் பிரதமர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளில் நசுக்கப்படும் சிறுபான்மையின மக்களை காக்கவே இச்சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவை தவிர வேறு எங்கும் போக முடியாதவர்களுக்காகத்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், கருத்து மோதல்கள் இவை எல்லாம் தான் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும்; மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தொந்தரவு செய்வதும் நமது பண்பாடு அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து பாடுபட வேண்டி இருப்பதாகவும்; இந்நேரத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மக்களைப் பிளவுபடுத்துபவர்களின் செயல்களை அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே