தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மாநிலத்தின் பல பகுதிகளிலும் தீவிரமாக பெய்து வருகிறது.
மதுரை, திருச்சி,திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாலையில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தன.
திருச்சியில் 2 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தினசரியும் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக
வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், திருப்பத்தூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ராணிப்பேட்டை, நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கரூர், திருச்சி மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணிநேரத்தில் உசிலம்பட்டியில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி, மதுரை மாவட்டங்களில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் அரபிக்கடலில் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு 7ந்தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.