மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் – இறுதி விசாரணை..??

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் இன்று (செப். 16) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர், ஏற்கெனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கலையரசன், டி.முருகேசன் ஆகியோர் அளித்த அறிக்கைகளையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்துப் பார்த்து வாதிட வேண்டியுள்ளதால், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினார்.

மேலும் அவர், இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது அரசுப் பள்ளி மாணவர்கள் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும், நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும், நடப்புக் கல்வியாண்டிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே