தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு வழக்கு – நாளை தீர்ப்பு

தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதையொட்டி திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்ட பலர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல் ஆகம விதிகளின் படி சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என மயிலாப்பூர் ரமேஷ் தரப்பில் மனுவும், தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடை விதிக்கக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதுதொடர்பான வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் குடமுழுக்கு தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் எனவும், குடமுழுக்கின் போது தேவாரம், திருவாசகம் ஓதப்படுவதுடன், பயிற்சி பெற்ற அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கும் குடமுழுக்கு விழாவில் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 

இதேபோல் குடமுழுக்கின் போது தமிழில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் எனவும்; சமஸ்கிருதத்தில் வேதமந்திரங்கள் சொல்லப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கு தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்க செய்ய உத்தரவிட்டதுடன், குடமுழுக்குக்கு தடைக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.

இதுதொடர்பான மற்ற வழக்குகளில் நாளை தீர்ப்பு அளிக்கப்படும் எனக்கூறி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே