பாத்திமா லத்தீப் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியின் இந்த மரணம் ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது.

தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையும் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக பாத்திமாவின் தந்தை குற்றம்சாட்டியிருந்தார்.

இது மட்டுமல்லாமல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐ.ஐ.டியில் 5 மாணவர்கள் இதே போல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் அஸ்வத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே