கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா தடுப்புப் பணிக்கு ரூ.15,000 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று தவணைகளாக விடுவிக்கப்படும் என்றும் இதில், ரூ.7,774 கோடி தொகையை உடனடியாக விடுவிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளில் முகக்கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இதையடுத்து, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள் உள்பட கரோனா தடுப்புப் பணிக்குத் தேவையானவை அனைத்தும் இதன்மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே