#BREAKING : தஞ்சை பெரிய கோவிலில் இரு மொழிகளிலும் குடமுழுக்கு – தமிழக அரசு

தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்படும் என தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மற்றொரு தரப்பில் ஆகம விதிகள் படி சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என வாதிடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பிப்ரவரி 5ல் நடைபெற உள்ளது என்றும் சைவ வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மறை அடிப்படையிலேயே குடமுழுக்கு நிகழ்வினை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் சுந்தரர் கோவில் குடமுழுக்கு விழா தொடர்பான வழக்கில், விழாவை தமிழில், தமிழ் மறைகளை ஓதி நடத்துமாறு தனி நீதிபதி உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டிருந்த மனுதாரர், தமிழர்களின் தனி அடையாளமான தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் சமமான மதிப்பே வழங்கப்படுகிறது என்றும் குடமுழுக்கு விழாவை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதனை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே