கொரோனா சூழலில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும்? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி

கொரோனா சூழல் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதி தர முடியும்? என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ள நிலையில், மக்கள் தங்கள் வீடுகளில் சிலை வைத்து கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. 

இதற்கு பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி கட்சியினர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ராஜபாளையம் தர்மாபுரத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதிக்கக் கோரி ராமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், “தமிழகத்தில் தினமும் 6000 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மனுதாரர் மனுவை திரும்பப் பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய நேரிடும்” என்று கூறி வழக்கை நாளை ஒத்தி வைத்துள்ளார்.

முன்னதாக மனுதாரர் ராம்ராஜ் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், ஏழை ஜோடிகளுக்கு திருமணம் உள்ளிட்டவை நடத்தி வைக்கப்படும் என்றும்; இதனால் சமூக இடைவெளியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே