விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் சிலை வைக்கவோ, ஊர்வலமாக எடுத்து செல்லவோ, கரைக்கவோ கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடுமாறு அறிவுரை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்டு 22 வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா காரணமாக விநாயகர் சிலைகள் அமைக்க வழிபட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்குமாறு இந்து அமைப்புகள் சில கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் தமிழக அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி விநாயகர் சதுர்த்தியை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி கொள்ள வேண்டும். வீதிகள், கோவில்கள், தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்தல், வழிபடுதல், ஊர்வலம் செல்லுதல் மற்றும் அதை நீர்நிலைகளில் கரைத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி செயல்படாதவாறு காவல்துறையினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.