பெங்களூருவில் ஆகஸ்ட் 11 நடந்த கலவரம் தொடர்பாக தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உள்பட காவல்துறையினர் மேலும் 60 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 206 பேர் கைதாகியுள்ளனர். இன்று கைது செய்யப்பட்ட 60 பேரில், நாக்வாரா வார்டு காங்கிரஸ் கட்சி கார்பரேட்டர் இர்ஷாத் பேகத்தின் கணவர் கலீம் பாஷாவுன் அடங்குவார். பாஷாவுக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் SDPI ஆகியவற்றுடன் நெருங்கிய அரசியல் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூருவில் புலிகேசிநகர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட தேவர்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி மற்றும் காவல்பைரசந்திரா பகுதியில் கடந்த 11ம் தேதி இரவு காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு, அவரது சகோதரி வீடுகளின் மீது தாக்குதல் நடத்திய கும்பல், தேவர்ஜீவனஹள்ளி மற்றும் காடுகொண்டனஹள்ளி போலீஸ் நிலையங்களையும் சூறையாடியது.
போலீஸ் வேன், கார், ஜீப் உள்பட 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இறந்தனர். வன்முறை மோதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வன்முறைக்கு அடுத்த நாள், குறைந்தது 145 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை காணொலி மூலமாக நீதிபதியின் முன் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சி நாகவாரா பகுதி கவுன்சிலர் இர்சாத் பேகத்தின் கணவர் கலீம் பாசா உள்பட மேலும் 60 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.