பேரறிஞர் அண்ணா நினைவு தினம் – திமுக சார்பில் அமைதிப் பேரணி..!!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக தொண்டர்களும் வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சென்னை வாலாஜா சாலையில் இருந்து புறப்பட்டது.

அமைதி பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு,எச்.ராஜா, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அண்ணா நினைவிடத்தில் அமைதி பேரணி நிறைவடைந்தது. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அண்ணா நினைவிடத்தில் இன்று மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திமுக தொண்டர்களும் வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அதிமுக சார்பாகவும் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே