எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால் சிக்கலில் உள்ள நாராயணசாமிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. காங். – எம்.எல்.ஏ. தனவேலு கடந்தாண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் அமைச்சர்கள் இருவரும் காங். – எம்.எல்.ஏ.க்கள் இருவரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இதனால் காங். – எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 10 ஆக குறைந்தது.
அதாவது 28 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபையில் காங். ஆட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.
பெரும்பான்மைக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் தேவை.
எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங். கட்சிக்கு 7 அ.தி.மு.க.வுக்கு 4 பா.ஜ.வுக்கு 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
காங். ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக கவர்னரிடம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் கையெழுத்திட்டு மனு அளித்தனர்.இதையடுத்து 22ம் தேதி (நாளை) சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் தமிழிசை கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில், ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணன், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனால், நாராயணசாமிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.ராஜினாமா செய்த பிறகு லட்சுமிநாராயணன் கூறியதாவது: கட்சியிலும், ஆட்சியிலும் எனக்கு மரியாதை இல்லை.
என்னால் ஆட்சி கவிழவில்லை. ஏற்கனவே ஆட்சி கவிழ்ந்த நிலையில் தான் உள்ளது.
இத்தனை நாள், என்னால் ஆட்சி கவிழக்கூடாது என அமைதியாக இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.