ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் அமைதியாக கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென வந்த கும்பல் அடிதடி ரகளையில் ஈடுபட்டது.
தொண்டர்கள் மீது நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது.
காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ரங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது. அப்போது மண்டபத்திற்குள் தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைமை என்ற மஞ்சள் நிற கொடியுடன் புகுந்த 100க்கும் மேற்பட்டோர் திடீரென மேடையை நோக்கி சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்ததோடு திடீரென அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து அடிக்க ஆரம்பித்தனர்.
இதனால் கூட்டத்தினர் சிதறி ஓட்டம் பிடித்தனர்.
அடிதடியில் ஈடுபட்டவர்கள் மேடையை நோக்கி கூச்சலிட்டபடி நாற்காலியை தூக்கி வீசினர். இதனால் நாற்காலிகள் அங்கும் இங்கும் பறந்தன.
அங்கிருந்தவர்கள் அமைச்சரை பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்.
பரஞ்சோதியின் சகோதரர் அன்பரசு மீது தாக்கியதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கலாட்டாவில் ஈடுபட்டவர்கள் இரண்டு பெண் நிர்வாகி மீதும் தாக்கியதில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தகராறு செய்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
தகராறு ரகளைக்கு காரணம் என்னவென்று விசாரித்த போது, அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் பதவியை மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் எதிர்பார்த்தார்.
ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவரது உறவினர் ஒருவர் மற்றும் ஆதரவாளர்கள் தான் தகறாறு செய்தனர்.
மேலும் முத்தரையர் சங்கத்தினர் பயன்படுத்தும் மஞ்சள் நிறக்கொடியுடன் வந்ததால் அவர்களை யாரும் தடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறைக்கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி ரகளை சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.