CAA எதிர்ப்பு பேரணியில் நடிகர் சங்கம் பங்கேற்காது..!!

திமுக கூட்டணி நடத்தும் குடியுரிமை சட்டதிருத்த பேரணியில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கேற்கவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

திமுக கூட்டணி சார்பில் வருகின்ற 23-ம் தேதி நடைபெறும் குடியுரிமை சட்டதிருத்த கண்டனப் பேரணியில் தென்னிந்திய நடிகர் சங்கம் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த அழைப்பு பற்றி பேசிய சங்கத்தின் துணைத் தலைவர் நடிகர் கருணாஸ் கூறுகையில், பேரணியில் கலந்துகொள்ளாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது.

தனிப்பட்ட முறையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கோ, விஷாலுக்கு அழைப்பு வரவில்லை.

நடிகர் சங்கம் தற்பொழுது அரசாங்கம் நியமித்த தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் திமுகவின் கடிதம் தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலுவலகத்திற்கே சென்று உள்ளது.

மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து கருத்து கூறவும் முடியாது தென்னிந்திய நடிகர் சங்கம் கலந்து கொள்வார்கள் அல்லது கலந்து கொள்ள மாட்டார்கள் என அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாது.

சித்தார்த் போன்ற சமூக அக்கறை கொண்ட நடிகர், நடிகைகள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கலந்து கொள்ளலாம் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே