LATEST NEWS : திருவள்ளுவரை தொடர்ந்து விவேகானந்தருக்கு நேர்ந்த கொடுமை!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றாக திகழும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு, மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணங்கள் பன்மடங்காக உயர்வு, விடுதி நிர்வாக அமைப்பின் சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டால் ரூ.20,000 வரை அபராதம் என்பன உள்ளிட்ட மாணவர்களை முடக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டி ஜே.என்.யூ மாணவ அமைப்புகள் கடந்த வாரம் முதல் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதையடுத்து ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் உயர்த்தபட்ட கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை பகுதியளவு திரும்பப்பெற்றுக் கொள்வதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.

மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பொருளாதார நிதியுதவி திட்டத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, மாணவர்கள் வகுப்பிற்கு திரும்புமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் சிலையை சுற்றியுள்ள அடிப்பகுதியில் தகாத வார்த்தைகளால் பெயிண்ட் கொண்டும் மர்ம நபர்கள் எழுதியுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக தமிழ்நாட்டின் தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கருப்பு மை பூசியும், சாணி எறிந்தும் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே