தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சார்ந்தவர் விஜி. இவர் பெங்களூரில் காய்கறி மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
விஜிக்கும், அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.
இதனையடுத்து இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் திருமணத்தை முடித்துவிட்டு மறுநாள் ஊருக்கு திரும்பிய நிலையில், புதுமணத் தம்பதியை ஊர் எல்லையில் கூட்டம் நடத்தி மூன்று மாதத்தில் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, பெண்ணை தன்னுடன் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி திருமணம் தள்ளி சென்ற நிலையில், பெங்களூரில் பணியாற்றி வந்த விஜி வருமானத்திற்கு வழி இல்லாமல், தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பின்னர் தனது மனைவியை தன்னுடன் அனுப்புமாறு ராஜேஸ்வரியின் தந்தையிடம் வற்புறுத்தி கேட்டு வந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி ராஜேஸ்வரியின் தந்தை விஜியை அழைத்ததாக தெரியவருகிறது.
மேலும், இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என்ற பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், மறுநாளே பாலக்கோடு அருகே மர்ம உறுப்பு நசுக்கப்பட்ட நிலையில். சாலையோரம் விஜி அரை நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள தொங்கிய நிலையில், ராஜேஸ்வரியின் தந்தை தனது மகனை கொலை செய்துவிட்டதாக விஜயின் பெற்றோர் குற்றம்சாட்டி, அவரது உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.