சென்னை: அடுத்தடுத்து நிகழும் அமைச்சர்கள் ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகளினால் அதிமுக முகாம் பரபரப்பாக காணப்படுகிறது.
தமிழகத்தில் 2021ம் ஆண்டில் சட்டபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இரு பெரும் ஆளுமைகளான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் நடக்கும் தேர்தல்.
அரசியலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் முக்கியமான, அதே நேரத்தில் கட்சியில் அடுத்த அடையாளம் யார் என்பதை காட்டும் தேர்தல் ஆகும். ஆனால் சில நாட்களாக அதிமுகவில் ஒரு விவாதம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
2021ம் ஆண்டில் யார் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி என அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு கருத்துகளை கூறி வந்தனர். மக்கள் தான் அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள், எடப்பாடியார் தான் என்றும் முதல்வர் என்று கட்சிக்குள் பேச்சுகள் எழுந்தன.
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார்? என துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பிறகு, முதல்வருடன் மீண்டும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து 2வது கட்டமாக ஓ.பி.எஸ் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட 6 பேர் அவரது இல்லத்திற்கு சென்றனர். தொடர்ந்து அமைச்சர்களின் ஆலோசனை கூட்டங்களினால் சென்னை கிரீன்வேஸ் சாலை காலை முதலே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.