திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அமல்படுத்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
கொடைக்கானலில் நேற்றைய தினத்தை ஒப்பிட்டு பார்க்கையில், இன்று மேலும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
திண்டுக்கல்லில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 601க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, கொடைக்கானலில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் வணிக தலைவர்கள் உள்ளிட்டோர் இணைந்து முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வணிகர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டமானது மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதில், வணிகர்கள் சார்பில் வருகின்ற திங்கள் கிழமை முதல் கொடைக்கானலில் முழு ஊரடங்கை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றானது மக்கள் அதிகளவு கூடுவதால் ஏற்படுகிறது.
இதனால்தான் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்களிடையே ‘சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என்றும் ‘முககவசம் அணிய வேண்டும்’ என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொடைக்கானலில் மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க காய்கறி மற்றும் மளிகை கடைகளில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.