7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் : மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் கடிதம்..!!

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக அனுமதி வழங்கக்கோரி கடந்த 21ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள பன்வாரிலால் புரோகித், இந்த மசோதா குறித்து பல்வேறு கோணங்களில் தாம் ஆராய்ந்து வருவதாகவும்; இது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை சமீபத்தில் சந்தித்த அமைச்சர்களிடமும், நீட் தேர்வுக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் தேவை என்ற தகவலை தெரிவித்ததாகவும் ஆளுநர் பன்வாரிலால் அவருடைய கடிதத்தில் கூறியுள்ளார்.

இதற்கிடையே மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் இன்னும் முடிவெடுக்காததை கண்டித்து திமுக சார்பில் வரும் 24ந்தேதி ஆளுநர் மாளிகை முன்பு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே