திருமாவளவன்,நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெல்ஃபேர் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் பங்கேற்றன.

போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் சித்தார்த், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது. மாணவர்களும் மற்றவர்களும் அமைதியான முறையில் போராட வேண்டும் என்றார்.

இதேபோல் போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளின் பொறுப்பாளர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சாதக பாதகங்களை எடுத்துக் கூறி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய முகமது கவுஸ் உள்ளிட்ட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சட்டத்துக்கு விரோதமாக கூடுதல் மற்றும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுதல் போன்ற 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே