மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக கூறினார்.

இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என தெரிவித்தார்.

ஜூலை 1ம் தேதி முதல் புதிய அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை என்றும், இதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று மீண்டும் காஷ்மீருக்கு திரும்பி உள்ள 5 ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு தலா 5.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவுக்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்படும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே