சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மாமல்லபுரம் வருகை

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை வர உள்ளனர். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை ஆளுநர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவேற்கிறார்கள்.

இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் கோவளம் சென்று அங்கு உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தனி விமானத்தில் வரும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், இன்று மதியம் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு ஜி ஜின்பிங் செல்கிறார்.

கிண்டி ஓட்டலில் ஜி ஜின்பிங் தங்குவதை ஒட்டி, அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜி ஜின்பிங் தங்கும் அறை, அந்த அறை இருக்கும் மாடியில் முதல் அடுக்கு பாதுகாப்பு மொத்தமும் சீன அதிபரின் தனி பாதுகாப்பு படையின் வசம் உள்ளது.

மாலை 4 மணியளவில் ஹோட்டலில் இருந்து கார் மூலம் மாமல்லபுரம் செல்லும் சீன அதிபருக்கு சாலையின் பல்வேறு இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியவாறு அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட உள்ளனர்.

கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு இரவு உணவை ஒன்றாக பகிர உள்ளனர். இந்த சந்திப்பு நாளையும் மாமல்லபுரத்தின் புகழ்மிக்க பகுதிகளில் தொடர உள்ளது.

தீவிரவாதம், தீவிரவாதத்திற்கான நிதி ஆதாரங்களை ஒடுக்குதல், எல்லை பாதுகாப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த பேச்சுவார்த்தைகளில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-சீனா இடையிலான அரசாங்க உறவுகளை மேம்படுத்த இந்த பேச்சுவார்த்தைகள் உதவும் என்றாலும் இரு தலைவர்களிடையே எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்றும் காஷ்மீர் தொடர்பான பேச்சு வார்த்தை இடம் பெறாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை பிற்பகல் 2 மணிக்கு மேல் பிரதமர் மோடியுடனான விருந்துக்குப் பின்னர் அதிபர் ஜின்பிங் நேபாளம் புறப்பட்டு செல்கிறார். அதன் பின்னர் மோடியும் டெல்லி திரும்புகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே