கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பம் – நித்தியானந்தா

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பத்திருப்பதாக சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.

சிறுமிகள் கடத்தல், பாலியல் தொந்தரவு என பல்வேறு விதமான புகார்களும், சர்ச்சைகளும் சாமியார் நித்தியானந்தா மீது ஒரு புறம் அணி வகுத்து நின்றாலும் மறுபுறம் தனது சத்சங்கத்தை வழக்கம்போல் தொடர்ந்து வருகிறார்.

அவர் எங்கிருக்கிறார் என்கிற மர்மம் ஒருபுறம் நீடித்து வரும் அதே வேளையில் மறுபுறம் இணையத் தளம் மூலம் தனது சத்சங்கத்தில் அதிரடியாக பேசி வருகிறார் சாமியார் நித்யானாந்தா.

நேற்று அவர் நடத்திய சத்சங்கத்திலும் அந்த அதிரடிகள் தொடர்ந்தன.

தன்னைப் பற்றி வரும் மீம்ஸ்களால் வருத்தம் அடையவில்லை என்றும் மீம்ஸ் போடுகிற மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும் நானும் ஜாலியாக இருக்கிறேன் என நித்தியானந்தா கூறினார்.

முன்பெல்லாம் நாட்டில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால்தான் அதனை திசை திருப்ப தம்மை பற்றிய செய்திகள் உலாவும்; ஆனால் தற்போது ஏதாவது பெரிய பிரச்சனை வரும் போது தவிர்த்து மற்ற நேரங்களிலெல்லாம் முழுநேரமும் தம்மை பற்றித்தான் ஊடகங்கள் பேசிக்கொண்டிருப்பதாகவும் நித்தியானந்தா தெரிவித்தார்.

வின்னர் படத்தில் வரும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என்கிற வடிவேலு காமெடியைப் போல் தனது நிலை ஆகிவிட்டதாகவும் நித்தியானந்தா விரக்தியாகக் கூறினார்.

கைலாசா நாடு அமைக்கும் திட்டத்தால் தமக்கு அடிதான் விழும் என்று நினைத்ததாகவும்; ஆனால் அதற்கு மாறாக ஆதரவு பெருகி வருவதாகவும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

கைலாசா நாட்டில் குடிமக்கள் ஆவதற்காக உலகெங்கிலுமிருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் நித்தியானந்தா கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே