கோடை விடுமுறைக்கு வரிசை கட்டும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்

கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட, விஜய் சேதுபதி நடித்துள்ள 4 படங்கள் தயாராகி வருகின்றன.

தமிழ்த் திரையுலகில் அதிகப் படங்களில் நடித்து வரும் நாயகன் என்றால் அது விஜய் சேதுபதிதான். தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகியவற்றிலும் சில படங்களில் நடித்துக் கொண்டு எப்போதுமே பிஸியாகவே இருக்கிறார். தற்போது அதுவே தயாரிப்பாளர்களுக்குச் சிக்கலை உருவாக்கியுள்ளது.

தமிழில் விஜய் சேதுபதி ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’, ‘லாபம்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம்’ உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் சில படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

எப்போதுமே கோடை விடுமுறைக்குத் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆகையால், இந்தச் சமயத்தில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’, ‘லாபம்’ ஆகிய 4 படங்கள் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளன.

இதில் எந்தப் படத்தை முதலில் வெளியிடுவது என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் ஒரே நடிகரின் 4 படங்களை எப்படி வெளியிடுவது என்ற குழப்பமும் விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே