இந்திய விமானப் படைக்கு வலு சேர்க்கும் வகையில் பிரான்ஸிலிருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் நாளை மாலை இந்தியா வந்து சேர்கின்றன.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த ரஃபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரஃபேல் விமானத்தில் உள்ளன.

ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரஃபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. அந்த விமானங்கள் முறைப்படி இந்திய விமானப் படையில் கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி இணைக்கப்பட்டன.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா படைகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ரஃபேல் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரான்ஸின் இஸ்ட்ரெஸ் நகரிலிருந்து நாளை காலை புறப்படும் இந்த 3 ரஃபேல் விமானங்களும் இடைநில்லாமல் 8 மணி நேரம் பயணித்து இந்தியா வந்து சேர்கின்றன.

இந்த விமானத்துடன் பிரான்ஸின் டேங்கர் விமானங்களும் வருகின்றன. நடுவானில் ரஃபேல் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டுச் சென்றுவிடும்.

இந்த 3 விமானங்களும் ஜாம்நகர் சென்றடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாலா படைத்தளத்தில் நிறுத்தப்படுமா அல்லது மேற்கு வங்க மாநிலம், ஹசிம்மரா படைத்தளத்தில் நிறுத்துவது குறித்துப் பின்னர் முடிவு செய்யப்படும்.

இதன் மூலம் இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கும்.

பிரான்ஸில் பயிற்சியில் இருக்கும் இந்திய விமானிகள் அனைவரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்துப் பயிற்சிகளையும் முடித்து நாடு திரும்பிவிடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே