சென்னை துறைமுகத்துக்கு வந்த சீன கப்பலில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..

சென்னை துறைமுகம் வந்த சீன கப்பலில் இருந்த  பணியாளர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த கப்பலும், பணியாளர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து சென்னை வந்த 18 MV மேக்னைட் எனும் சீன நாட்டு கப்பலில் 19 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

அவர்களுக்கு துறைமுக சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைகளை செய்ததில், இருவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது.  

இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

கப்பல் பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சீன நாட்டவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சீன கப்பலும், அதில் உள்ள பணியாளர்களும் துறைமுகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ரத்த மாதிரிகளின் ஆய்வு முடிவு இன்று மாலை தெரிய வரும் என்றும், அதைத் தொடர்ந்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் துறைமுகப் பொறுப்புக் கழகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே