அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர் என, அண்ணா குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக பொதுச் செயலாளருமான அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை, வள்ளுவர் கோட்ட முகப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பலர் அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா, திராவிடப் பெருங்கனவு கண்டு, தமிழர் நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர்.
சமூக நீதிக் கொள்கைகளை அரசியல் சட்டமாக்கி, சமநீதி சமத்துவச் சீர்திருத்தம் தந்தவர்.
தமிழக அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி,அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர்” என பதிவிட்டுள்ளார்.