கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் இன்னும் சில நகரங்களுக்கு இந்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றார். ஆனால், எக்காரணம் கொண்டும் கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் எடியூரப்பா ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா தனது வீட்டில் சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்தபோது எடியூரப்பாவுக்கு நெகட்டிவ் என வந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே