தோசைமாவில் தூக்க மாத்திரை கலந்து கணவரை கொலை செய்த மனைவி…!

சென்னையை அடுத்த புழலில் கணவனுக்கு தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

புழல், புத்தகரத்தை சேர்ந்த சுரேஷ் அதே பகுதியில் இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சுரேஷ்-அனுசுயா தம்பதிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், திங்களன்று காலை வீட்டில் சுரேஷ் இறந்து கிடப்பதாக அவரது மனைவி அனுசுயா தொலைபேசி மூலம் புழல் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, சுரேஷின் உடலை கைப்பற்றிய காவல்துறை உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.

ஆனால் கழுத்தில் காயம் இருந்ததால் கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் மனைவி அனுசியாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்து விசாரணையை தீவிரப்படுத்தியபோது, கணவர் சுரேஷை கொலை செய்ததை அனுசுயா ஒப்புக் கொண்டுள்ளார்.

அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததோடு, தன்னை அடித்து துன்புறுத்தியதால் சுரேஷை கொலை செய்ததாகவும், உறவினர் முரசொலிமாறன் என்பவரின் உதவியுடன் கணவருக்கு தோசையில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாகவும் அனுசுயா கூறியுள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்தில் மயங்கிய கணவரை, துப்பட்டாவால் கழுத்தை நெரித்ததாகவும் இதற்கும் உறவினர் உதவியதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் அனுசுயாவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

கொலைக்கு உதவிய உறவினரை தேடிவருகின்றனர்.

குடித்துவிட்டு துன்புறுத்திய கணவரை மனைவியே தோசைமாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே