தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொடூரமான முறையில் எரித்துக் கொலை!

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவர் கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா, மாதாபூரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இரவு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியங்கா, தனது சகோதரி பவ்யாவை செல்போன் மூலம் அழைத்துள்ளார்.

தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதால் சிலர் உதவி செய்வதாக கூறி வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை அங்கிருக்கும் சிலர் முறைத்து பார்த்துக் கொண்டிருப்பதால், பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

இதையடுத்து சில நிமிடங்களிலேயே பிரியங்காவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

#RIPPriyankaReddy

இந்நிலையில் ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண், எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண், பிரியங்காதான் என்பதை உறுதி செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 10 தனிப்படைகளை அமைத்து தலைமறைவான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே