“இலங்கை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் அனைத்தும் விடுவிக்க நடவடிக்கை!”:இலங்கை அதிபர் உறுதி!

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக முதன்முறையாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

3 நாள் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்த அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று காலை சந்தித்துப் பேசினார்.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற கோத்தபய ராஜபக்ச-வை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பிரதமருடனான சந்திப்பிற்கு பின் பேசிய கோத்தபய ராஜபக்ச, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் கைது செய்யப்படுவது குறித்து பேசப்பட்டதாகவும், மேலும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே