இரண்டு நினைவிடங்கள் எதற்கு..?? ஜெயலலிதாவின் வேதா நிலையம் குறித்து நீதிபதி கேள்வி..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லாமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடைமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஒரு நபருக்கு இரண்டு நினைவில்லம் எதற்கு. ஏற்கெனவே கடற்கரையில் ஒன்று உள்ளதே என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல் வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி முன் வழக்காக நடந்து வந்தது. இரு தரப்பிலும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷேசசாயி, இன்று அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் எனும் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது எனக்கூறி அதற்காக பிறபிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

மேலும் 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ. 67,90,52,033 இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி ரூ. 36,87,23,462யை வசூலிக்க வருமான வரித்துறை தனியாக தொடங்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

தீர்ப்பை வாசித்த பின்னர், ஒரே நபருக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு என்றும், கடற்கரையில் பீனிக்ஸ் நினைவிடம் இருக்கும்போது, வேதா நிலையத்தையும் மக்கள் பணத்தில் ஏன் மற்றொரு நினைவிடம் அமைக்க வேண்டுமென கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே