கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருபக்கம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. அதில் பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் மண்டலங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இது வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதற்கு காரணமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து மீண்டும் தடை விதிக்கப்பட்டது. தற்போது UNLOCK 3.0 நடைமுறைகள் நாளையுடன்(ஆகஸ்ட் 31) உடன் முடிவடைகிறது. இதையொட்டி UNLOCK 4.0 வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அதேசமயம் தமிழகத்தில் கொரோனா பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் இ-பாஸ், பொதுப் போக்குவரத்து, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரை மாநில அரசுகள் தங்கள் மாநில நிலவரத்தைக் கருத்தில் கொண்டு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படுவது குறித்து மாநில அரசு முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திலும் நாளையுடன் UNLOCK 3.0 கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளதால் இன்று அல்லது நாளை UNLOCK 4.0 தொடர்பான வழிகாட்டுதல்கள் தமிழக அரசால் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இ-பாஸ் நடைமுறையும் முற்றிலும் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.