தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் நீதியை நம்புவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஆலையை மூடியது.
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
ஆலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இளைஞா் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதிகள் கடந்த ஜனவரி 8-ஆம் தேதியன்று ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு வழக்கின் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் வழக்கின் தீர்ப்பில் நீதியை நம்புவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட பதிவில், “நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக… உங்கள் நான்.” என தெரிவித்துள்ளார்.