தமிழகத்தில் பாஜக மிகப்பெரும் கட்சியாக மாறி வருவதாகவும், அதேசமயம் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தமிழகத்தில் அதிமுக-திமுக இடையே போட்டிதான் இதுவரை நிலவி வந்தது, இனிமேல் பாஜக-திமுக போட்டியாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
திமுகவிலிருந்து பாஜகவிற்கு ஏராளமானவர்கள் வர இருக்கிறார்கள் எனவும் பாஜக நிர்வாகி வி.பி.துரைசாமி தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் முருகன், பாஜக தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக மாறி வருகிறது என்றார்.
அதனை வெளிப்படுத்தும் விதமாகவே வி.பி.துரைசாமி அவ்வாறு கூறியுள்ளார் என்று நாசூக்காக தெரிவித்துள்ளார். அத்துடன் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என அவர் கூறினார். திமுக எம்.பி கனிமொழி இந்திய அளவில் பிரபலமானவர், அனைவருக்கும் அறிமுகமானவர்.
அவரை டெல்லி விமான நிலையத்தில் எந்தவொரு காவல்துறை அதிகாரியும் அதுபோல விசாரித்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் செய்வதற்காக இதுபோன்ற கருத்துக்களை கனிமொழி பதிவிட்டுள்ளதாக கூறினார். மேலும், இ.பாஸ் முறையை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.