7 பேர் விடுதலை – முதல்வர் பழனிசாமி விளக்கம்..!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து திமுக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகிறது என முதல்வர் குற்றசாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 1-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, இரண்டாம் நாளான நேற்று மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

பின்னர், மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், 3-வது நாளாக இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து திமுக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகிறது என குற்றசாட்டியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான்.

நளினிக்கு மட்டுமே ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என திமுக ஆட்சியில் அமைச்சரவையில் விவாதித்தனர் என்றும் மற்றவர்களின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என திமுக ஆட்சியின் போது அமைச்சரவை முடிவு செய்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு முதல்வர், ஆளுநரை சந்தித்து, 7 பேர் விடுதலை தொடர்பாக கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே