பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018 ஆண்டு திண்டுக்கல்லில்(வேடசந்தூரில்) நடந்த கூட்டமொன்றில் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும்,அவர்களது வீட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக,விருதுநகரைச் சேர்ந்த ஒருவரால் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து,புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 (அரசு பணி செய்ய இடையூறு ஏற்படுத்துதல்), மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்றைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜராகாததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக,சமூக ஊடகங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பெரியார் திராவிட கழகம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு, உள்பட எச் ராஜா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே